"எல்லை மீறிப் போய்விட்டது.. இனிமே தண்டனைதான்!" – ஜடேஜாவின் நோ-பால் தவறை கண்டித்த சுனில் கவாஸ்கர் அதிரடி யோசனை!
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவையாக இருந்த நிலையில், அடிக்கடி நோ-பால் வீசியதால் போட்டி டிராவில் முடிந்தது.
இலங்கைக்கு எதிரான கொழும்பு 2-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவையாக இருந்த நிலையில், இலங்கை வீரர் சோனல் தினுஷாவின் அதிரடி சதம் காரணமாக போட்டி டிராவில் முடிந்தது. இருப்பினும், முதல் போட்டியில் வென்ற இந்தியா 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள், குறிப்பாக ரவீந்திர ஜடேஜா மற்றும் அறிமுக வீரர் சரண்ஷ் ஜெயின் ஆகியோர் அடிக்கடி நோ-பால் வீசி ஏமாற்றமளித்தனர். கடந்த 2021 முதல் ஜடேஜா மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் 85-க்கும் மேற்பட்ட நோ-பால்களை வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர், இந்த நோ-பால் பிரச்சனை குறித்து கடுமையான கருத்தைத் தெரிவித்துள்ளார். பந்துவீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பகுதுலே, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஃப்ரீ ஹிட் முறையைக் கொண்டு வரலாம் என்று வேடிக்கையாகக் கூறியிருந்த நிலையில், கவாஸ்கர் அதை நிராகரித்துள்ளார். பவுன்சர் கட்டுப்பாடு மற்றும் சிறிய எல்லைகள் காரணமாக ஏற்கனவே பேட்டிங் செய்வது எளிதாகிவிட்டதால், ஃப்ரீ ஹிட் மூலம் பேட்ஸ்மேன்களுக்கு மேலும் சாதகமாக்கக் கூடாது என அவர் கூறினார்.
அதற்குப் பதிலாக, கவாஸ்கர் ஒரு அதிரடி யோசனையை முன்வைத்துள்ளார். "ஒவ்வொரு முறை நோ-பால் வீசும் போதும் பந்துவீச்சாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். அடுத்தடுத்த தவறுகளுக்கு அபராதத் தொகையை இரட்டிப்பாக்க வேண்டும். அத்துடன் பந்துவீச்சு பயிற்சியாளருக்கும் அதில் பாதி தொகையை அபராதமாக விதிக்க வேண்டும்.
ரன்-அப் அளவிடுவதற்கு டேப் இருக்கும் போது, எல்லைக் கோட்டைத் தாண்டி பந்துவீசுவதற்கு எந்த சாக்கும் சொல்ல முடியாது. இந்த அபராதத் தொகையை அணியின் இரவு உணவிற்காகப் பயன்படுத்தலாம்" என்று கவாஸ்கர் பரிந்துரைத்துள்ளார். மேலும், ஃபீல்டிங்கின் போது பந்தை சரியாக பேக்-அப் செய்யாத வீரர்களுக்கும் இதுபோன்ற அபராதம் விதிக்கலாம் என்றும் அவர் கூறினார்.