"தோனி விளையாடலேன்னா நானே இழுத்துட்டு வருவேன்" - ஹர்பஜன் சிங் பரபரப்பு கருத்து!
இன்று (மே 19, 2026) இரவு 7.30 மணிக்குச் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஐபிஎல் 2026 லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் எதிர்நோக்கியிருப்பது சிஎஸ்கேவின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியைத்தான். நடப்பு சீசனில் ஏற்பட்ட காயம் காரணமாகத் தோனி இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இருப்பினும், பிளே-ஆஃப் நம்பிக்கையைத் தக்கவைக்கச் சென்னை அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த நிலையில், முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், தோனியுடன் இணைந்து இரு உலகக் கோப்பைகளை வென்றவருமான ஹர்பஜன் சிங், ஒரு வேடிக்கையான ஆனால் உற்சாகமூட்டும் கருத்தைத் தெரிவித்துள்ளார். "தோனி இன்று விளையாடவில்லை என்றால், நானே அவரை இழுத்துக்கொண்டு மைதானத்திற்குள் வந்துவிடுவேன்" என்று அவர் கூறினார்.
தோனியின் ஓய்வு குறித்துப் பேசிய ஹர்பஜன், "தனது கடைசி ஐபிஎல் போட்டியைச் சென்னை ரசிகர்களின் முன்னிலையில்தான் விளையாடுவேன் என்று தோனி முன்பே கூறியிருந்தார். இந்தச் சீசனில் இதுவே சிஎஸ்கேவின் கடைசி ஹோம் மேட்ச் ஆகும். எனவே, தோனி கடைசி முறையாக விளையாடுவதை நாம் பார்க்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால், ஒருவேளை அவர் இன்று விளையாடவில்லை என்றால், அடுத்த ஆண்டும் தொடர்ந்து விளையாட வருவார் என்றுதான் பொருள். அவரை உங்களால் எளிதில் கணிக்க முடியாது. தயவுசெய்து இன்று விளையாடுங்கள், இல்லையென்றால் நானே உங்களை மைதானத்திற்குள் இழுத்து வந்துவிடுவேன்" என்று ஜாலியாகக் குறிப்பிட்டுள்ளார்.
சேப்பாக்கம் ரசிகர்கள் இன்று மாலையில் தங்களின் சொந்த மைதானத்தில் தோனியை மீண்டும் பார்க்க ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். தோனி இன்று விளையாடுவாரா என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.


