தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வி... சிக்கலில் இந்தியா - அரையிறுதி வாய்ப்பு எப்படி?
மகளிர் டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவிடம் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், குரூப் 'ஏ' பிரிவில் அரையிறுதிக்கான போட்டி சூடுபிடித்துள்ளது. ஆஸ்திரேலியா ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் ஆகிய மூன்று அணிகளும் இரண்டாவது இடத்திற்கான போட்டியில் உள்ளன. இந்தியாவின் நெட் ரன் ரேட் வலுவாக இருப்பதால், மீதமுள்ள இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அரையிறுதி உறுதியாகும்.
மகளிர் டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை தொடர்ந்து, குரூப் 'ஏ' பிரிவில் அரையிறுதிக்கான போட்டி கடுமையாகியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்துக்கு எதிராக பெற்ற அபார வெற்றிகளால் இந்தியாவின் நெட் ரன் ரேட் +2.511 என வலுவாக உள்ளது. மீதமுள்ள வங்காளதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றால், இந்தியா எளிதாக அரையிறுதிக்கு முன்னேறலாம். ஆனால் ஒரு தோல்வி கூட வாய்ப்பை கடினமாக்கும்.
தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்ததால் அதன் நெட் ரன் ரேட் -0.546 என பின்தங்கியுள்ளது. எனினும், இந்தியாவை வீழ்த்தியதால் அதன் அரையிறுதி வாய்ப்பு உயிர்ப்புடன் உள்ளது. மீதமுள்ள நெதர்லாந்து மற்றும் வங்காளதேசத்துக்கு எதிரான போட்டிகளில் பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
வங்காளதேசம் நெதர்லாந்தை வீழ்த்தி தொடரைத் தொடங்கியது, ஆனால் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்ததால் ரன் ரேட்டில் பின்னடைவை சந்தித்தது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அடுத்த போட்டிகளில் வெற்றியுடன் ரன் ரேட்டையும் அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற +4.391 என்ற அபார நெட் ரன் ரேட்டுடன் ஆஸ்திரேலியா ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. தொடர் தோல்விகளால் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் ஆகிய மூன்று அணிகளுக்கும் இடையே கடும் நெட் ரன் ரேட் யுத்தம் நடைபெற உள்ளது. இந்த மூன்று அணிகளில் நெட் ரன் ரேட்டில் முன்னிலை வகிப்பதே இரண்டாவது அரையிறுதி இடத்தை தீர்மானிக்கும்.