மகளிர் டி20 உலகக் கோப்பை: நடுவர் குழுவில் 4 இந்தியர்களுக்கு இடம்
வரவிருக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான நடுவர்கள் மற்றும் போட்டி நடுவர்கள் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் இடம்பெற்றிருப்பது இந்திய கிரிக்கெட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது.
10-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற உள்ளது. உலகின் முன்னணி மகளிர் அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்காக மொத்தம் 18 பேர் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த உலகக் கோப்பை தொடரிலும் பெண்கள் அதிகாரிகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக மகளிர் உலகக் கோப்பை போட்டிகளில் அனைத்து கள நடுவர்களும் பெண்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடுவர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஜனனி, விரிந்தா ரதி மற்றும் காயத்ரி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். மேலும் போட்டி நடுவர் (Match Referee) பட்டியலில் இந்தியாவின் லட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச அளவிலான மிகப்பெரிய கிரிக்கெட் தொடரில் இந்திய அதிகாரிகள் இடம்பெற்றிருப்பது, நாட்டின் நடுவர் மற்றும் நிர்வாக திறமைகளுக்கான அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பை போன்ற உயர்மட்ட போட்டிகளில் இவர்களின் பங்களிப்பு இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


